வெயிலை நலம் விசாரித்துக் கொண்டிருந்தன
என் வேர்வைத் துளிகள் ...
எரியும் தீயில்
எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தது
பிளாட்பார மின்விசிறி ...
இரயிலை எதிர்பார்த்து - சிலர்
கிழக்கு பார்த்துக் கொண்டிருந்தனர் ...
" அப்பப்பா ... என்ன வெயில் ?
மழை பேஞ்சா பரவால்ல ... " - கைக்குட்டையில்
முகம் துடைத்தபடி பேசிக்கொண்டிருந்தார் - பெரியவர்
. . . . . . . . .
மழை !?..
மனம் ஏங்கத் தொடங்கியது ...
அம்மாவுக்குமாய் சேர்த்து ...
. . . . . . . . .
காபி ஸ்டாலில் சொட்டிக்கொண்டிருந்த குடிநீர்
குழாயில் கை நனைத்து விளையாடிக்
கொண்டிருந்தது - குழந்தை
. . . . . . . . .
அம்மாவின் ஞாபகக் கசிவுகள் ,
என் உணர்வுகளோடு விளையாட ஆரம்பித்தன
அந்தக் குழந்தையைப் போல ...
வானலியில் வறுபடும் வெங்காயமாய் வெந்து
புழுங்க ஆரம்பித்தது - மனம்
. . . . . . . . .
தூரத்தில், வெயிலுக்கு குடை பிடித்தபடி
நடந்து வந்து கொண்டிருந்தார் - ஒரு பெண்
. . . . . . . . .
வெப்பம் குறைந்து, குளிர் காற்று வீச ஆரம்பித்தது ...
. . . . . . . . .
கை நனைத்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை
ஓடிச் சென்று தாவியது - அந்த குடை பெண்ணிடம் ...
"ஏய் .. நில்லு .." - கத்தினார் குழந்தையோடு இருந்தவர்
. . . . . . . . .
வானம் கிழித்து மண்ணில் இறங்கியது மின்னல்
வலியில் கதறித் துடித்தது - வானம் ...
ஆரவாரம்மாய் ஆரம்பித்தது - மழை
. . . . . . . . .
குழந்தைக்குமாய் சேர்த்து குடை பிடித்தபடி
ஓடி வந்தார் - அப்பெண்
. . . . . . . . .
மழையில் குளித்தபடி வந்து கொண்டிருந்தது - இரயில்
. . . . . . . . .
குடைப் பெண்ணிடம் குழந்தையை வாங்கியவர்
" அப்படியே அம்மா போல இருக்கீங்களா ...
அதான் .." என்றார்
அப்பெண் குழந்தையின் தலை வருடியபடி விலக
குழந்தை கைநீட்டி அழ ஆரம்பித்தது ...
. . . . . . . . .
நான் - என் கண்ணீர் துளி மறைக்க
மழையில் நனைய ஆரம்பிதேன் ...
. . . . . . . . .
இரயில் நின்றது ,
குடைபெண் - பெண்களின் பெட்டியில் ஏறினார் ...
. . . . . . . . .
மழை முரட்டுத்தனமாய் பெய்யத் தொடங்கியது
உள்ளும் ... புறமும் ...
. . . . . . . . .
சாலைகளில் - வழியடைத்து
தேங்க ஆரம்பித்தது மழை வெள்ளம் ...
. . . . . . . . .
சற்று முன், மழை விரும்பிய அப்பெரியவர்
மழை வெறுத்து விலகி நின்றார் ...
. . . . . . . . .
திரும்பிப் பார்த்தேன் ,
இரயில் மேற்க்கோடிக் கொண்டிருந்ததது ...
. . . . . . . . .
. . . . . . . . .
நனைந்தபடி நடக்க ஆரம்பிதேன் - டெலிபோன் பூத் நோக்கி ..
. . . . . . . . .
பாக்கெட்டில் இருந்த ஒத்த பத்து ரூபாய் நோட்டை
தடவியபடி, டயல் செய்து காத்திருந்தேன் .......
. . . . . . . . அம்மாவிடம் தலை துவட்டிக் கொள்ள . . . . . . . .
No comments:
Post a Comment